பரீட்சை நாடகத்துக்கு
ஒத்திகை பார்க்கும்
கடைசி நாள்
விடிய விடிய விழித்திருப்பேன்
தன்னைப் படிக்க ஆளில்லையென்று
ஃபான் காற்றில் மோதித்தினமும்
அழுகிறது புத்தகம்
தூரத்தில் அலறும் நாய்
காற்றில் அசையும் ஆடையைப் பார்த்து
மனம் உருவகித்துக் கொண்ட பேய்
எங்கேயோ பசித்து அழும் ஒரு சேய்
நானூறு பக்கங்களை நடுநிசிக்குள்
முடிக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கும் நான்
கோடி நட்சத்திரங்களின் குவியல் வானம்
கோடி எழுத்துக்களின் குவியல் புத்தகம்
உடுக்களை எண்ணமுயன்று
தினமும் தோற்கிறது முகில்
பாடங்களைப் படிக்க முயன்று
இன்றும் தோற்கிறேன் நான்
காற்றின் கொட்டாவியையும்
மரக்கிளைகளின் இரைச்சலையும்
நாயின் காலடி அரவத்தையும்
சருகுகளின் சலசலப்பையும்
காதோரம் கதறும்
நுளம்பின் கானத்தையும்
சந்தத்தைப்பேணும்
கடிகாரத்தின் டிக்டிக்கையும்
எழுதும் போது ஏற்படும்
உராய்வின் ஓசையையும்
அவ்வப்போது செத்துவிழும்
நீர்க்குமிழியின் சிதறலையும்
இன்றுதான் கேட்கிறேன்
முதன்முதலாக
எத்தனை நிசப்தம் இந்த இரவு?
எத்தனை சப்தம் இந்த இரவு?
எத்தனை குரூரம் இந்த இரவு?
எத்தனை அழகு இந்த இரவு?
எத்தனை பயங்கரம் இந்த இரவு?
எத்தனை வசீகரம் இந்த இரவு?
வியந்து முடிப்பதற்குள்
தீர்ந்து போகிறது இரவு,
படித்து முடிப்பதற்குள்
சோர்ந்து போகிறது மனது
படிப்பதற்காக இரவா?
இரவுக்காக படிப்பா?
ஏ ஆசிரியனே!
என் ஒவ்வொரு இரவும்
பரீட்சைக்கு முதல்நாளாய்
மாற்றியமைக்கமாட்டாயா?
-பப்புமுத்து
அண்ணா நாளைக்கு exam?