ஐயையோ ஐயையோ என்று
ஓடிவந்தார் பெருமான் அங்கிள்
என்னப்பா என்ன என்று
கேட்டு முடிப்பதற்குள்...
ஆயிரம் மத்தளங்கள்
அடம்பிடித்து மிரண்டாற்போல்
அத்தனை பொருட்களையும்
உதைந்தே நொருக்கி விட்டார்
மெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த
டியூப்லைட் இயக்கியையும்
என்னதான் செய்தாரோ
எரிந்து எரிந்து அணைகிறது
ஏனிந்த அவசரம் அங்கிள்
என்னதான் பிரச்சனை என்றேன்
அடேயப்பா அதையேன் கேட்டாய்
என்று எரிந்து கொண்டார்
சொல்லி முடிப்பதற்குள் - உம்
சோலி முடிஞ்சிடுமோ?
விளங்கிற மாதிரிக் கொஞ்சம்
விவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன்
மைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு
அந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு
அந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்
அந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்
வேர்க்காத ஊருக்குள்ள
வாழுகின்ற நீரெல்லாம்
குளித்தால்தான் என்ன
குளிக்காட்டித்தான் என்ன என்றேன்!
அடேய் சின்னப் பொடியா
உனக்கு விளங்கியென்ன பயன்
என்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே!
சந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே!
திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்
இடிமுழங்கி முடியவில்லை
மழை கொஞ்சம் ஓய்ந்தாலும்
நீரோடி வடியவில்லை!
எந்த ஏரியாவில் குளித்துக்
கொண்டு இருக்கிறாரோ!
என்னென்ன பொருளெல்லாம் - அங்கே
உடைந்து நொருங்கியதோ!
மத்தளங்கள் இடி முழங்க
சிவபெருமான் குளிக்கிறாராம்
தாத்தா சொன்ன கதை
புனைவு என்று தெரிந்த பின்னும்
நினைவில் நிற்கும் கதை
தாழமுக்கம் இருக்கும் மட்டும்
வாழும் இந்தக் கதை!
-Bavananthan