நாம் வாழ்க்கையை எப்படி எதிர்நோக்குகிறோமோ, அப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னதான் ஒரு மனிதன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஏதாவது ஒரு குறை அல்லது கவலை குடிகொண்டுஇருக்கும். அண்மையில் வாசித்த ஒரு உளவியல் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.
"நீங்கள் தனியாக கடற்கரையில், அலைகள் வந்து வந்து போவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?"
இக்கேள்விக்கு விடையை சொல்லிவிட்டு மேலே படியுங்கள். அதாவது நீங்கள் இந்தக்கேள்விக்கு என்ன விடை சொல்லியிருந்தீர்களோ, அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை எதிர் நோக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதே கேள்வியை நான் நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன், சோகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி போன்று பல்வேறு விடைகள் சொன்னார்கள்.உண்மையில் பலருக்கு இது சரியாகவே அமைந்தது.
கிறிக்கட் போட்டி ஒன்றில் விளையாட முதல் கிறிக்கற் வீரர்கள் உஷ்ணப்படுத்தும் அப்பியாசங்களை செய்துகொள்வார்கள். அதற்குக்காரணம், திடீரென உடல் ஒரு செயலில் ஈடுபடும் போது தசைப்பிடிப்போ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அதற்கு உடலை இசைவாக்கிக் கொள்ள அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வர்கள்.
அது போலதான் இதுவரை மந்தமாக அல்லது ஒரு சுவாரஸ்யமற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழல், நட்புவட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட நட்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை, அதன் காரணமாக நண்பர்களாகி ஒரு மாதங்கூடக் கடக்காத நிலையில் பலர் இன்று நட்பை முறித்துக் கொண்டு முகங்கொடுத்தும் பேசமுடியாமல் திரிவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
அதற்குக் காரணம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. இவர்கள் சூழலில் எது நடந்தாலும் அது தமக்கு நடப்பதாக தம்மை அதற்குள் உள்வாங்கி யோசிப்பார்கள், விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நடக்கும் சம்பவங்களை தமக்காகவே நடப்பதாக உணர்த்த முற்படுவார்கள், எனவே தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை தமக்கே நடைபெறுவது போல உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும்.
நண்பர்களிடையே பிரச்சினைகள் வரும் போது முடிந்தளவு அதிகம் கோபமாக பேசாதீர்கள் அல்லது பேசாமலே இருங்கள். பேச்சுக்களில் ஆரம்பித்து முறிந்த கைகள் ஏராளம். இரண்டு நாட்களின் பின்னர் பேசும் போது கோபங்கள் ஆறிப்போயிருக்கும். நியாயம் யார்பக்கம் இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.முக்கியமாக எதையுமே ஊகித்து முடிவெடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவது நலம்.
முகத்துக்கு நேரே சில விடயங்களை சொல்லிவிடுவது இரு விடயங்களுக்கு நல்லது.
-1-மனதில் எந்தப் பாரமும் இல்லை.
-2-நாம் முட்டாள்கள் இல்லை என்பது மற்றவருக்கு உணர்த்தப்படும்
-லோஷன்
கட்டாயம் சிலரை நண்பர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக அவர்களுடன் கதைக்காமல் விடவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. ஒரே விருப்பு வெறுப்புக்கள், ஒரே மாதிரியாக ஆர்வங்கள் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே ஒரே அலைவரிசையில் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களை சூழலுக்கேற்றவாறு இசைவாக்கப் பழகுங்கள்.
டிஸ்கி: கண்ணுக்கு முன்னால் நடக்கும் சில விடயங்களுக்கு பார்வையாளனாக இருந்து பார்த்ததால் எழுதப்பட்ட பதிவு இது. வேற எதுவுமில்லைங்கோ..:-)