Heart Breakers Entertainmentன் அனுசரணையில் வெளிவரவிருக்கும் 2வது குறுந்திரைப்படமான "ஒரு வழிப்பாதை" என்ற குறுந்திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் டிசெம்பர் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இக் குறும்படமானது வெளியிடப்படவிருக்கிறது. எனவே அனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குவதோடு குறும்படம் தொடர்பான உங்கள் விமர்சனங்களையும் வழங்குமாறு குறுந்திரைப்படக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
"THE EXAM Never Ends" என்ற எனது முதலாவது குறுந்திரைப்படத்தின் Trailer இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவில் குறுத்திரைப்படம் வெளியிடப்படவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேப்பைமாரித்தனம்
முன்னொரு காலத்தில் மாரி என்று ஒருவன் இருந்தான், அவன் இருக்கும் ஊரில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு அவன்தான் காரணமாக இருக்கும். சின்னப் பிரச்சியையும் ஊதிப்பெரிதாக்கும் வல்லமை படைத்தவன். ஆனால் பிரச்சினைக்குக் காரணம் மாரிதான் என்று கண்டுபிடிக்கும் போது அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான். சின்ன இடைவெளியில் எப்படியாவது தப்பி விடுவான்.
அதற்குப் பிறகு அவனைப்போல யாராவது பிரச்சினையை உண்டாக்கிவிட்டு இடையில் தப்பி ஓடிவிட்டார்கள் என்றால் அதை அந்த ஊர் மக்கள் Gapல்மா(றி)ரித்தனம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே மருகி காலப்போகில் கேப்(பை)மாரித்தனம் என்று ஆகிவிட்டது.
மொள்ளைமாரித்தனம்
மேற்குறிப்பிட்ட அதே மாரி தனது சொந்த ஊரில் வழக்கம்போல பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி பக்கத்து ஊருக்குள் தஞ்சம் புகுந்தான். அங்கேயும் தனது தப்பியோடும் விளையாட்டுக்களை ஆரம்பித்த மாரி காலப்போக்கில் அங்கேயும் பிரபலமாகிவிட்டான். அங்கும் இதே போல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு புலி போல் பதுங்கிப் பதுங்கி யார் கண்ணிலும் சிக்காமல் தப்பி விடுவான்.
எனவே அந்த ஊர் மக்களும்அதற்குப் பிறகு நமது மாரியைப் போல பிரச்சினை ஏற்படுத்திவிட்டு மெதுவாகத் தப்புபவர்களுக்கு மெல்ல(மாறி)மாரித்தனம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் மருகி மொள்ளமாரித்தனம் என்று அழைக்கப்படுகிறது.
After Reading This Post
பி.கு: ஒரு பதிவு எழுதணும்னா என்ன கேப்மாரித்தம் OR மொள்ளமாரித்தனமும் பண்ணலாம் தப்பில்ல =P
புரட்சி தமிழன் சத்யராஜின் நடிப்பில் முன்னணி நடிகர் விஜய் இணைந்து கலக்கியிருக்கும் தலைவா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. (நம்புங்க பாஸ்)முதல்நாள் முதல் showவே படத்தைப் பார்க்கும் அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததது. அண்மையில் நாகராஜ சோஜன் படத்தில் நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜயுடன் இணைந்திருப்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.
படத்தில் ஆரம்பத்திலிருந்தே சத்யராஜ் விஜயுடன் தொலைபேசியில் மட்டும் கதைப்பதாகக் காட்டப்பட்டு எப்பொழுது தனது திருமுகத்தை ரசிகர்களுக்கு முழுமையாகக் காட்டுவார் என்று ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர். தான் மிகப்பெரிய நடனக் கலைஞராக இருந்தும் விஜய்க்கு மட்டும் நடனமாடுவதற்கு வாய்ப்புக்களை வழங்கி தான் கடைசிவரை நடனமாடாதது சத்யராஜின் பெருந்தன்மையைக் காட்டினாலும், அவரது உயிரினும் மேலான ரசிகர்களுக்கு அது ஏமாற்றமே. விஜய் இந்தியாவுக்கு வந்து நீங்க யாரு? இதுவரைக்கும் மும்பையில என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க? ஏன் மறைந்து வாழுறீங்க என்று கேட்கும் காட்சிகளை இதுவரை யாருமே தமிழ் சினிமாவில், இல்லை இல்லை உலக சினிமாவில் ஏன் ரஜனிகாந் பாட்ஷா படத்தில் கூட வராத புதுமையான காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அமலாபால் விஜயை போலீசாக வந்து ஏமாற்றுவதும் கோடியில் ஒருவரால் மட்டுமே சிந்திக்கக் கூடிய ஒரு அபூர்வமாக சிந்தனை என்றே கூற வேண்டும்.
"ஒரு தடவை கையில கத்தி வந்திடிச்சுன்னா, ஒண்ணு காக்கும், இல்லை அழிக்கும்"
"இது ஒரு வழிப் பாதை"
போன்ற பஞ்ச் டயலாக்குகளை சத்யராஜ், விஜய், சந்தானம் என எல்லாரும் சொல்லுவதும் இயக்குனரின் தனித்துவத்தையும், ஹீரோ சத்யராஜின் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
"தலைவா தலைவா" என்ற பாடலில் தனது ஹீரோயிசத்தைக் வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பிலும் இடையில் "தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி" என்று வரிகளைத் திணித்து துணை சக நடிகர்களையும் சமமாகப் பார்த்த சத்யராஜை நினைத்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. உலக சினிமா வரலாற்றிலேயே முதல் தடவையாக எந்த ஒரு படத்திலும் நாம் இதுவரை பார்த்திராதவாறு
படத்தின் கதாநாயகனே இடையில் இறந்து போகிறமாதிரிக் காட்டப்படும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தின் ஹீரோ இடையிலே இறந்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று குண்டக்க மண்டக்க யோசித்து படமாக்கியிருக்கிறார்கள்.
தலைவா = IT'S A DO or DIE =P
Post Moral: சுறா படத்தையே தைரியமாப் பாத்தவனுக்கு தலைவா ஒண்ணும் பெரிசில்லடா!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.
அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.
ஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது? இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா? என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.
நட்பு வட்டம்
முதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.
இரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.
நண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.
தன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.
உயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.
இப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.
இதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா? என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..
நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக "உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது? என்ன காரணம்? என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.
அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.
இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.
அதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.
ஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.
அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.
தலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்!
அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்
பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது
மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்
என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?
தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்
ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்
இன்னும்
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய் - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்