திடீரெனத் தரித்து நிற்கிறேன்
காலச்சக்கரம் வேகமாக ஓடிவருகிறது
பாலைவனங்களுக்குள் பழரசத்தைக் கண்டது மாதிரி
மனதுக்குள் ஒரு பூகம்பம்
திடீரெனப் பெய்த மழையால்
மனது குளிர்ந்து
பிரவாகம் கண்களை முட்டி
வெளியேறத் துடிக்கிறது
அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்
பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது
மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்
என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?
தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்
ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்
இன்னும்
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய் - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்
வலமொன்றும் இடமொன்றுமாய்
முந்தானை பிடித்தபடி - உன்னைப்
பற்றி நிற்கும் பட்டாம் பூச்சிகள்
முன் முடியில் எட்டிப்பார்க்கும்
வெள்ளைக் கிரீடம்
ஆம், தேவதைகளின் தேவதை நீ
புதிதாய்ப் பூசிக்கொண்ட புன்னகையுடன்
கண்கள் நான்கும் சந்தித்ததில்
என் கண்ணீரை திரைபோட விட்டுக்
கடந்து போகிறாய் நீ
தொட்டுப் பார்க்கும் கனதியில்
நமக்குள் இருக்கும் அதே மௌனம்
என் இதயத் துடிப்பின் ஓசையில்
முதன்முறையாகக் கரைந்து போகின்றது
தென்றலை விடவும் புயல் வேகமானது
புயல்களை நம்பியபடி
புரிந்து கொண்டு பிரிகிறேன்
பாலைவனப் பூகம்பங்கள்
பசுமையை ஏற்படுத்திவிடுவதில்லை
அங்கேயும்
வலிகளும் வடுக்களும்தான்!
/// மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும் ///
மிகவும் பிடித்த வரிகள்...