காட்டிலே தவம் கொண்டு
காவியில் உடை கொண்டு
ஏட்டிலே பொருள் கண்ட
ஏகாந்தத் துறவி சொன்னான்
பிரிவென்ன சேர்வென்ன
பிறப்பென்ன இறப்பென்ன
ஆதியென்ன அந்தமென்ன
நீயென்ன நானென்ன
கரைகின்ற நொடிகளிலே
பிரிவெல்லாம் ஆசை
விரைகின்ற மரணத்திலே
உறவெல்லாம் மாயை
கண்ணே தெரியாமல்
காதுக் கருவி மாட்டாமல்
கோலூன்றாக் கொடை பெற்ற
ஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான்
ஆறேழு தலைமுறை
பாத்தவன்டா நான்
ஊரையே உருவாக்கி
விட்டவன்டா நான்
ஊரெல்லாம் உறவெனக்கு
பாரெல்லாம் மகனிருக்கு
வெறிச்சோடிய வீட்டினிலே
தனிமைதான் துணையெனக்கு
வெதும்பிய கண்ணீரை
தூசென்று துடைத்துவிட்டு
கண்ணாடி முன் நின்று
என்னுறவு இதுவென்றான்
அலுத்துக் களைத்தாலும்
சலித்து வெறுத்தாலும்
தோள் கனக்கும் சுமையுடன்
ஓடிவந்த பெற்றோரை
உறவென்றால் என்னவென்று
கேட்க எத்தனிக்க
நேரமே தெரியாமல்
நெடுநேரம் ஓடுகின்றோம்
காசு பணம் வரவரவே - எம்
கடன்களெல்லாம் அடைக்க வேண்டும்
பிள்ளைக்கு சேர்த்து வைக்க
நிலுவையில் போட்டு வைக்க
என்று ஒரு பட்டியலை
படபடென நீட்டி வைக்க
எங்கே உம் தாய் தந்தை
என்று கேட்டதுமே
ஏதோ ஒரு இல்லத்தில்
மகிழ்ச்சியாய் இருக்கிறாராம்
மாதாந்தம் சந்தா மட்டும்
கச்சிதமாய் போகிறதாம்
நன்றி சொல்லி ஓடிவந்து வந்து
இளைப்பாறிய எத்தனிக்க
உறவுக்கு விடை தேடி
ஓயாமல் அலையிறியே
பேசாமல் பேஸ்புக்கை
திறந்து விட்டுப் போ என்றான்
நேரத்தை காசாக்கும்
மனிய இயந்திரத்தின்
மழலையே கடக்காத
தொழிநுட்பச் சிறுவண்டு
அப்பா அம்மாக்கு தெரியுமாடா
எண்டு கேட்டால்
ஆறு மாசமா அவர்களுடனேயே
அதிலதானே கதைக்கிறானாம்
அப்பா வர காலையாகும்
அம்மா வர மாலையாகும்
பிறந்த போது பாத்ததுக்கு
வடிவா இன்னும் பார்க்கலயாம்
வேலைக்கு செல்வியம்மா
தினமும் வருவாராம்
சாப்பாடு தண்ணியெல்லாம்
அவர்தான் தருவாராம்
அவர் மட்டுந்தான் தன்னோடு
அதிகம் பேசிப் பழகுவாராம்
உறவென்று இவனுக்கு
செல்வியம்மாவாவது இருக்கின்றா
அவவிண்ட மகனுக்கு அங்கே
என்ன நிலைமையோ!
-Bavananthan