நேற்றைய இரவு கொஞ்சம்
நேரத்துக்கு படுத்திருந்தால்..
ஒவ்வொரு காலையிலும்
அங்கலாய்க்கும் விடயம் இது
சங்கரங்கள் களைக்காமல்
வேக எல்லை குலைக்காமல்
சிகப்புக் கோட்டை முந்துவது
சிரமான காரியந்தான்
கண்களை மூடாமல்
காற்றைக் கிழித்தபடி
சுட்டெரிக்கும் சூரியனை
முகத்தில் சுமந்தபடி
காவல் ஐயாவை
கடந்து ஓடவேண்டும்
வீதி விதிகளை
தெரிந்தே மீறவேண்டும்
ஓவர்டேக் எனும் பெயரில்
எதிர் வீதி கடப்பவனை
முட்டாமல் தவிர்ப்பதற்கு
மூலைக்குள் ஒதுங்கவேண்டும்
அவுடி வைத்திருந்தும்
அமரர் ஊர்தியாய் அதைச் செலுத்தும்
ஆசாமியை திட்டித் திட்டி
முந்தி முறுக்க வேண்டும்
காதல் காந்த அலைகளையும்
கிடப்பிலே போட்டு விட்டு
சில அழகிய கவிதைகளை
கடைக்கண்ணோடு கடக்க வேண்டும்
அவசரம் என்றாலே
ஆயிரம் பிரச்சனைகள்
அதனால் என் வாயில்
பொன்மொழி அர்ச்சனைகள்
இன்றும் அப்படித்தான்
இயல்பாய் இன்னொரு நாள்
வேகமுள் ஓடிச் சென்று
எழுபதைத் தொட்டிருக்கும்
காலபகவானும் தன்
சுற்றைக் குறைக்கவில்லை
எனது சக்கரமும்
அவனுக்கு சளைத்ததில்லை
சடுதியாய் ஏதோ ஒன்று
என்னில் மோதியது
நிலை குலைந்து
என் ஆடை பற்றித் தொங்கியது
வேகமாய் போகும் என்னை
மெதுவாகச் சொன்னது போல்
போ போ என்றாலும்
போகாமல் தங்கியது
தட்டிவிடக் கை எடுத்தால்
வேகம் குறைந்து விடும்
சிகப்புக் கோடு வந்து - என்
சம்பளத்தை வெட்டி விடும்
எழுபது நாற்பதாச்சு
இன்னும் அது இரங்கவில்லை
என்னதான் வேணும் என்று
சத்தமிட எத்தனித்தேன்
அழகாய் கண் உருட்டி
மெதுவாய் பார்த்துவிட்டு
கைகளால் காற்றுக்கு
கவசம் பூட்டியது
என்னவென்று கேட்டிடலாம்
இனியும் பொறுமையில்லை
இடது பக்க சமிஞ்ஞையுடன்
மெதுவாய் நிறுத்திவிட்டேன்
அசுரக்காற்றின் அழுத்தமில்லை
என்று அது அறிந்ததுமே
மெல்லிய தன் கவசத்தை
மெல்ல இறக்கியது
எட்டிப் பார்த்துவிட்டு
ஏதோ சொல்லி விட்டு
வண்ணச்சிறகடித்து பறந்தது - அந்த
மஞ்சள் கோட்டு வண்ணாத்திப்பூச்சி!
-Bavananthan
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment