நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவேழுத வாய்ப்பளித்த மூடநம்பிக்கை கொண்டவர்களை வைத்துப் பிழைக்கும் போலிகளுக்கு நன்றி :P
திருகோணமலையில் ஒரு 4 அல்லது 5 வயதுக் குழந்தை தெய்வத்தின் அவதாரம், சூனியம் எடுக்கிறது, மக்களின் குறை தீர்க்கிறது என்றெல்லாம் ஒரு விடயம் பரவலாகப் பரவியது அனைவரும் அறிந்த விடயம். இதைத் தொடர்ந்து மக்கள் பலர் அதிகாலையிலிருந்து வரிசையில் நின்று இக்குழந்தையிடம் குறைகளைச் சொல்வதும் அக்குழந்தை அவர்களின் வீட்டுக்குப்போய் குறிப்பிட்ட இடத்தில் குழிகிண்டச் சொல்லி அதில் ஏதோ மந்திரத் தகடு இருக்கிறது என்று சொல்லி அதை எடுத்துவிட்டால் அவர்களின் சூனியம் எடுக்கப்பட்டுவிடும் எனச் சொல்லி பணம் கறப்பதும் சில காலமாக நடந்துவருகிற விடயம்.
எனக்கு சில தினங்களுக்கு முன்னர் இதை நேரடியாகப் பார்க்கும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. நண்பன் ஒருவனின் வீட்டில் அக்குழந்தை வருகிறது என்று கேள்விப்பட்டு அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அங்கே அந்தக்குழந்தை, குழந்தையில் தாய், தந்தை ஆகிய மூன்று பேர் வந்திருந்தனர். முதலில் குழந்தை வீட்டுக்கு வந்ததும் வீட்டு வாசலில் உள்ள படிக்கட்டுக்கு கொஞ்சம் முன்னால் ஒரு வட்டம் போட்டுக் காட்டி இங்கேதான் இருக்கு என்று கூறியது.
உடனே அவ்விடத்தில் ஒரு 3 அடிக்கு குழி கிண்டி அதில் கிடைத்த மண்ணை அரித்து, கழுவி, எஞ்சிய கற்களை கொட்டி அதில் ஏதும் தகடு இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தனர். இதைக் குழந்தை, குழந்தையின் பெற்றோர் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களையே அவதானித்தபடி அமர்ந்திருந்தேன். குழந்தை தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயின் முகத்தில் ஒரு பதற்றத்தை உணரமுடிந்தது.
கொஞ்சநேரம் கழித்து "
ஆக்கள நோட்டம் விடாம வேலையப் பாருங்க" என்றார் அந்தக் குழந்தையின் தாய். நான் அவரை அவதானித்துக் கொண்டிருப்பதை உணர்திருப்பார்போலும்.
அன்று சுமார் 5 மணிநேரமாகத் தேடியும் ஒரு ஆணி கூடக் கிடைக்கவில்லை. பிறகு நாளை வருகிறோம் என்று கிளம்பிச் சென்று விட்டனர்.
பின்னர் மீண்டும் மறுநாள் வந்து அதே இடத்தில் இன்னும் கொஞ்சம் தோண்டச் சொன்னது அக்குழந்தை. மீண்டும் தோண்டி மண்ணை எடுத்து கழுவி, அரித்துப் பார்த்ததில் ஒரு தகடு அகப்பட்டது. அதை படக்கென்று தனது கையில் வாங்கிய குழந்தையின் தாய் "
அந்தத் தகடு கிடந்த இடத்தைச் சுற்றியுள்ள மண்ணை எடுத்து கடலில் போடுங்க" என்றுவிட்டு தகட்டை நைசாக மடித்து உடைத்துவிட்டார்.
உடனே நண்பனின் வீட்டிலிருந்த ஒருவர் வந்து தகட்டை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு "
இது நாங்கள் வீடு கட்டும் போடு வைத்த காவல்த் தகடு எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது" என்று சொல்ல, உடனே குழந்தையின் தாய் "
இல்லை இது சூனியத்தகடுதான்" என்று சமாளிக்க ஆரம்பிக்க, அவர்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் முற்றிய நிலையில். "
சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்த உங்களுக்குத் தெரியாதா?" என்று கோபமாக கதையை மாற்றி அவர் மீதே பழியைப் போட முயன்று, நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு மூக்குடைபட்டு அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் போலிச் சூனியக் குழுவினர்.
இந்தக் குழந்தையை வைத்து இதுவரை திருகோணமலையில் அரைவாசி வீடுகளில் இதுமாதிரி சூனியம் எடுக்கிறேன் என்ற போர்வையில் குழி கிண்டி தகடு எடுத்திருக்கிறார்கள்.
இல்லைத் தெரியாமத்தான் கேக்கிறன், இந்தக் குழந்தை வந்த பிறகு மட்டும் எப்பிடி எல்லா வீடுகளிலேயும் சூனியம், தகடு, மண்ணாங்கட்டி எல்லாம் மாட்டுப்படுகிறது?
ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்தமாதிரிப் போலிகளுக்குக் கொண்டாட்டம்தான்.கஷ்டம் வரும் போது யார் எவர் என்று பார்க்காமல் எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடுகிறார்கள்.
பி்கு - ஒரு வீட்டில் சூனியம் எடுக்கிறதுக்கு ஆரம்பத்ததில் 10000 ருபாய்கள் வாங்கியவர்கள் தற்போது கிட்டத்தட்ட 20000 ருபாய்கள் வாங்குகிறார்களாம் இந்தப் போலிச் சூனியக்குழுவினர்.